வேலூர், டிச.13: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 44.61 கோடியில் கடப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றாக தற்காலிக பஸ் நிலையத்திற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டுவதற்கு 44.61 கோடியில் 9.25 ஏக்கரில் ஓரடுக்கு கொண்ட பஸ் நிலையம் அமைய உள்ளது. இதற்கிடையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டுவது தொடர்பான அனைத்துக்கட்சியினர், வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.