உடன்குடி, டிச. 13: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு பெரும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளர் வெட்டு வைபவம் வரும் 16ம்தேதி நடக்கிறது. குதிரைமொழி கிராமத்தில் உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் தனித்துவமிக்கதாகும். அநீதிகள் தலை தூக்கும்போது அவற்றை அய்யனார் அழித்து நீதியை நிலைநிறுத்துவதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டு பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த நவம்பர் 17ம்தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6மணிக்கு வில்லிசை, சிறப்பு அபிஷேக பூஜை நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான நாளை (14ம் தேதி) முற்பகல் 11மணிக்கு ஜவர்ராஜா, மாலையம்மன் பூஜை, இரவு 9மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (15ம் தேதி) காலை 10 மணிக்கு மகளிருக்கான வண்ணக்கோலப்போட்டி, காலை 11மணி, நண்பகல் 12மணி ஆகிய நேரங்களில் சிறப்பு அபிஷேகம், மாலை 6மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 7மணிக்கு திருவிளக்கு பூஜை, தொடர்ந்து சமயசொற்பொழிவு, இரவு 9மணிக்கு உற்சவர் வீதியுலா நடக்கிறது.