கழுகுமலையில் புதர்மண்டிய சிறுவர் பூங்கா சீரமைப்பு

கழுகுமலை, டிச. 13: கழுகுமலையில் பராமரிப்பின்றியும், தொடர் மழையாலும் புதர் மண்டிய சிறுவர் பூங்கா தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலை, சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு, மலை மீதுள்ள சமணர் சிற்பங்கள், வெட்டுவான் கோயிலை காண வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு சிறுவர்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற ஊஞ்சல், சறுக்கு, ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர்கள் பெரிதும் பொழுதைப் போக்கி வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் ெபருக்கெடுத்த தண்ணீர் குளம் போல் பூங்காவில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியே சேறும், சகதியுமாக மாறியதோடு தற்போது புதர் மண்டிக் காணப்பட்டது.

இதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருகையால் சிறுவர்கள் உள்ளே சென்று விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்புவதற்கு அஞ்சினர். மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு முன்னதாக பூங்காவை சீரமைக்கவும், தேவையான வசதிகள் செய்துதரவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த 10ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து இதில் தனிக்கவனம் செலுத்திய பேரூராட்சி நிர்வாகம், சீரமைப்பு பணியில் களமிறங்கியது. இதன்படி பூங்காவில் புதர்மண்டிக்கிடந்த புற்களை அகற்றியதோடு நாள்கணக்கில் தேங்கி நின்ற தண்ணீரையும் வெளியேற்றி சீரமைத்தனர்.

இதையடுத்து பூங்காவில் விளையாடி மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பெற்றோர் இதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: