மாணவன் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி, டிச. 13: முதலியார்பேட்டையில் பெற்றோர் சண்டையால் படிக்க முடியாமல் விரக்தியடைந்த 9ம்வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். புதுவை, முதலியார்பேட்டை, அனிதா நகர், வைகை வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37), டைல்ஸ் தொழிலாளி. இவருக்கு தங்கம் என்ற மனைவியும், வர்சிதா (16), முகேஷ் (13) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இதில் தங்கம் அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பால் ஊற்றும் வேலை செய்கிறார்.

ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகேஷ் 9ம் வகுப்பு படித்து வந்தார். சமீபகாலமாக தம்பதியிடையே அடிக்கடி வீட்டில் குடும்ப சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் படிப்பு பாதிக்கப்படுவதாக முகேஷ் உறவினர்களிடம் கூறிவந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த முகேஷ், நள்ளிரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்த தகவலின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: