புதுச்சேரி, டிச. 13: பெரியகடை காவல் நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், குற்ற சம்பவங்களை தடுக்க பீட் போலீசாரின் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க பீட் காவலர்களின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு கவர்னர் கிரண்பேடி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதன் எதிரொலியாக ஒவ்வொரு காவல் நிலையத்தையும் சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி நேற்று பெரியகடை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிரடியாக ஆய்வு செய்தார். பீட் காவலர்களின் ஒருங்கிணைப்பு முறையாக உள்ளதா, குற்ற செயல்கள் தொடர்பான தகவல்கள் சரியாக பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்பதை காவல் நிலைய அதிகாரியான செந்தில்குமார் மற்றும் எஸ்ஐக்கள் முத்துகுமார், முருகன் ஆகியோரிடம் கேட்டறிந்த சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிலுள்ள குறைகளை உடனே சரிசெய்ய உத்தரவிட்டார்.