நித்திரவிளை, டிச.13: நித்திரவிளை சிறப்பு எஸ்ஐ இன்பராஜ் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்தார். நேற்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் சின்னத்துறை சுனாமி காலனியில் இருந்து படகிற்கு மானிய விலையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை வாகனத்தில் கடத்துவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார்.
அப்போது ஏ.வி.எம். கால்வாயை ஒட்டி இருட்டான பகுதியில் ஒரு சொகுசு காரில் 2 பேர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை ஏற்றிக்கொண்டு இருந்தனர். போலீசை கண்டதும் கடத்தல்காரர்கள் கால்வாய்க்குள் குதித்து தப்பி ஓடினர். தொடர்ந்து சிறப்பு எஸ்ஐ இன்பராஜ் வாகனத்தை சோதனை செய்தார். அப்போது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 700 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தையும், மண்ணெண்ணெயையும், நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து நாகர்கோவில் புட் செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.