ஓமலூர், டிச.12: பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய, ஓமலூர் வட்டாரத்தில் செங்கரும்பு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, தாரமங்கலம், ஓமலூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள ஓமலூர், கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடல், காமலாபுரம், குருக்குபட்டி, அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கஞ்சநாயக்கன் பட்டி, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, சர்க்கரைசெட்டிபட்டி, தும்பிபாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்தாண்டு மழையின்றி வறட்சி ஏற்பட்டதால், நடப்பாண்டு குறைந்த அளவே கரும்பு பயிரிட்டு உள்ளனர். 9 மாத பயிரான கரும்பு, மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.