×

சேலம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்

சேலம், டிச.12: சேலம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிரில் ஏற்பட்டுள்ள ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, இடைப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில், நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் 15,250 எக்டர் பரப்பிற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள, குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயரில், தொடர் மழையினாலும், தட்ப வெப்ப மாறுதல்களினாலும் ஆனைகொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடனும் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் 21 நாட்களை கொண்டது.

இந்த ஈ தாக்குதலினால் நெற்பயரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையை போல் தோன்றி, பார்ப்பதற்கு யானையின் கொம்பு போல் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள் மற்றும் தாள்களின் மேற்புறத்தில் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.

ஆனைகொம்பன் ஈ தாக்குதலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனை கொம்பன் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறனுடைய குறுகிய கால ரகங்களான ஏடிடி-39, ஏடிடி-45 , மத்திய கால இரகமான எம்டியு3 ஆகியவற்றை நடவு செய்யலாம். அதேசமயம், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்த கூடாது. ஆனைகொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசிதட்டான், குளவி போன்றவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். 10 சதவீதத்திற்கு மேல் தாக்குதல் தென்பட்டால், ரசாயன கொல்லி மருந்துகளை தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இது தொடர்பாக, தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : attack ,Salem district ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...