ஓமலூர், டிச.12: ஓமலூரில் இருந்து தொப்பூர் கணவாய் வரை, விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். ஓமலூரில் இருந்து தொப்பூர் வரையும், ஓமலூரில் இருந்து சேலம் மாமாங்கம் வரையும் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் கிராம சாலைகள் இணையும் பல இடங்களில், இரவில் போதிய வெளிச்சமில்லாததால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அடையாளம் தெரியாத வானங்கள் மோதி பலர் உயிரிழக்கின்றனர். அதிகரிக்கும் சாலை விபத்துக்களை தடுக்க, தனியார் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, சேலம் மாவட்ட காவல்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, விபத்து நடக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி, தீவட்டிப்பட்டி போலீசார் ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டுக்கல், சேத்துப்பாறை, தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி, குதிரைகுத்திபள்ளம் ஆகிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க பரிந்துரை செய்து, உயரதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.