மானூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள கழிவுநீர் குட்டையால் நோய் பரவும் அபாயம்

மானூர், டிச.12: மானூர் அருகே குத்தாலப்பேரியில் குடியிருப்பு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டையால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மானூர் ஒன்றியம் மாவடி ஊராட்சி குத்தாலப்பேரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் கூலித்தொழில் மற்றும் விவசாய தொழிலாளர்கள். குடியிருப்பு பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் அமைப்பதாக கூறி நீர்ப்போக்கினை இக்குழியில் வந்து இணைத்ததால் தற்போது கழிவுநீர் குட்டையாக மாறியது. மேலும் இதன் அருகிலேயே கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகின்றன. இப்பகுதியில் கோயில்கள், சிறுவர்கள் விளையாடும் பகுதியுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதி சிறுவர்கள் விளையாடும் போது குட்டையில் விழும் அபாயமும் உள்ளது. மேலும் இப்பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் தரைமட்ட தொட்டியையும் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.எனவே குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, அதனை சரள்மண் போட்டு நிரப்ப வேண்டும்.  மேலும் ஊரின் மையப்பகுதியில் பஞ்சாயத்து கிணறு பராமரிப்பின்றி தண்ணீர் நிறைந்து திறந்தநிலையில் உள்ளது. அதனை பயன்படுத்தவும், பாதுகாப்பிற்காக மூடி அமைத்து தரவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த நாட்டாண்மை சந்தானம் கூறியபோது,  இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஒரு பள்ளம் இருந்தது. அதனை மூடி சமுதாயநலக் கூடம் கட்டித்தர ஊராட்சி நிர்வாகத்திட கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தெருக்களில் கழிவுநீர் ஓடை அமைப்பதாக கூறி வாறுகாலை இக்குழியில் இணைத்ததால் கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடும் போது எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு குட்டையிலுள்ள கழிவுநீரை வெளியேற்றி சரள்மண் போட்டு நிரப்ப வேண்டும், ஊரின் மையப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும்

Related Stories: