உடன்குடி, டிச. 12: மெஞ்ஞானபுரத்தில் அரையாண்டு தேர்வுக்கு பயந்து ஒரே நாளில் மாயமான பள்ளி மாணவன், மாணவியை போலீசார் மீட்டனர்.உடன்குடி அடுத்த மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளியொன்றில் 10ம்வகுப்பு படித்து வரும் மாணவர் நேற்று முன்தினம் பள்ளிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர், உறவினர், நண்பர்களின் வீடுகளில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது தாய் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கல்விளையைச் சேர்ந்த 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவரும் பள்ளி செல்வதாக கூறிச் சென்றவர் மாலை நேரம் வரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். ஒரே நாளில் பள்ளி மாணவன், மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் தீவிர விசாரணையில் அரையாண்டு தேர்வு இன்னும் ஓரிரு நாட்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில் படிப்பு சரி வர ஏறாததால் வெளியூரில் வேலைக்குச் செல்ல முயன்ற மாணவனும், உறவினர்கள் வீட்டிற்கு செல்ல முயன்ற மாணவியையும் ேபாலீசார் மீட்டு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.