மதுரை, டிச.12: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஊராட்சி தேர்தல் நடந்து முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.9 ஆயிரமும், ஊராட்சி மன்ற தவைர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.34 ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர் ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் செலவு செய்யலாம். இந்த செலவு கணக்கினை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் 3 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது. உள்ளாட்சி தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை அனைத்து கட்சியினரும் பின்பற்ற வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தலைவர்கள் பிரச்சாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதி வாங்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு அரசியல் கட்சியினரின் முகவர்களை நியமித்தல் வேண்டும்’’ என்று தெரிவித்தார்.