ஈரோடு, டிச.12: ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பழனியப்பா நகரில் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அப் பகுதி வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 32வது வார்டுக்குட்பட்ட வெட்டுக்காட்டுவலசு விவேகானந்தர் ரோடு பழனியப்பா நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில், சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், அப் பகுதி அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சாக்கடை வசதி இல்லாததால் அனைத்து வீட்டின் முன்பும் குழி தோண்டி கழிவுநீரை தேக்கி வைத்துள்ளனர். இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் உடனடியாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.