ஈரோடு, டிச. 12: ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளிடம் 43 கோடி ரூபாய்க்கு ஜவுளிகளை வாங்கி மோசடி செய்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு ஜெகநாதபுரம் காலனி எஸ்கேசி ரோடு 5வது வீதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி கோகுலகண்ணன் (46) மற்றும் பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த நூல் வியாபாரி அசோக் ஆகியோர் தங்களிடம் காடாதுணி, வேட்டி கொள்முதல் செய்து பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், ஈரோடு கோட்டை தெப்பக்குளம் பகுதி சீரங்க வீதியைச் சேர்ந்த கோட்டை ராமு (எ) ராமு (46), இவரது மனைவி மணிமேகலை, மகன் அருணாச்சலீஸ்வரன் (எ) அருண், இவரது தாயார் மல்லிகா, தங்கராஜன், இவரது மனைவி கார்த்திகா, தேவேந்திரகுமார், ராஜேஸ், கொல்லம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த், தெப்பகுளம் வீதியைச் சேர்ந்த வேலுமணி, செழியன் ஆகிய 11 பேர் மீது 7 கோடி ரூபாய்க்கு துணி வாங்கி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.