ஈரோடு, டிச.12: மலேசியாவில் நடந்த ஆசிய நாடுகளுக்கு இடையேயான கோலூன்றி தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று ஈரோடு தீயணைப்பு வீரர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மலேசியா நாட்டில் சர்வாக்குசிங் பகுதியில் 21வது ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியை ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோசியேஷன் போட்டியை நடத்தியது. இதில் சீனா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேஷியா, ஈரான் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றன.இந்தியா சார்பில் ஈரோடு தீயணைப்பு துறை பயர்மேன் டிரைவர் ரவி (38) பங்கேற்றார். இதில், கோலூன்றி தாண்டும் போட்டியில் 2.75 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய அளவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். அவருக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிய அளவில் தங்க பதக்கம் வென்ற ரவிக்கு தீயணைப்பு துறை அலுவலர்கள், ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் கனடாவில் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நடக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.