தஞ்சை, டிச. 12: இன்னும் 3 நாட்களே உள்ளதால் தஞ்சை வட்டாரத்தில் சம்பா, தாளடி பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 14 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன்பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.