தஞ்சை, டிச. 12: தஞ்சையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிறது. இந்தியாவில் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியுரிமை என்பது மதத்தால் தீர்மானிக்கப்படக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் இஸ்லாமியர் அல்லாத பிற மதங்களை சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் என பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய, மாநில மையங்களின் அறைகூவலின்படி தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்க கல்லூரி முன் மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் குடியுரிமை திருத்த மசோதா நகலை தீவைத்து எரிக்க முயன்றதாக இந்திய மாணவர் சங்க தஞ்சை மாநகர செயலாளர் அருண்குமார் மற்றும் அரவிந்த், சிலம்பரசன், மணிகண்டன், நந்தகுமார், ஆனந்தராஜ் ஆகிய 6 பேரை தஞ்சை போலீசார் கைது செய்தனர்.