×

ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் வீட்டு பூட்டை உடைத்து 15 பவுன் கொள்ளை சாவகாசமாக மது அருந்திய மர்மநபர்கள்

பேராவூரணி, டிச. 12: பேராவூரணி அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடிய கொள்ளையர்கள் அங்கு சாவகாசமாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அக்கம்பக்கத்தினர் திரண்டதால் ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு கொள்ளையர்கள் தப்பினர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஏவி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (53). ஜெராக்ஸ் கடை உரிமையாளர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9ம் தேதி ஜெயபால் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு சென்றார். இந்நிலையில் கொள்ளையர்கள் அன்று நள்ளிரவு ஜெயபால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடினர். பின்னர் அவர்கள் அங்கேயே சாவகாசமாக அமர்ந்து மது அருந்தினர். \\

அப்போது பூட்டி கிடந்த வீட்டில் மின்விளக்கு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஜெயபால் வீட்டுக்கு திரண்டு வந்தனர். இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த 3க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களை அங்கேயே விட்டு விட்டு வீட்டின் பின்பக்கம் வழியாக சுவர் ஏறி குதித்து தப்பினர். இந்த தகவல் கிடைத்ததும் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்கள் ஓடி சென்றபோது மண்ணில் புதைந்திருந்த அவர்களின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்த தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலையில் இருந்து தனது வீட்டுக்கு வந்து ஜெயபால் பார்த்தார். அப்போது 15 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பேராவூரணி போலீசில் ஜெயபால் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...