×

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2200 கோடி மோசடி வழக்கு பணம் திரும்ப பெற விண்ணப்பித்த முதலீட்டாளர்கள்

கோவை, டிச.12:  கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2200 கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் நிதி நிறுவனம் பணத்தை திரும்ப அளிக்க முன் வந்ததால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பணத்தை திரும்ப பெற விண்ணப்பித்தனர்.  கோவை  பீளமேட்டில் ‘‘யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ்’’ என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையை  தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இந்த நிறுவனத்துக்கு மாநிலம் முழுவதும் 10க்கும்  மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு  செய்யும் பணத்துக்கு 10 மாதங்களில் இரட்டிப்பு பணம் தருவதாக தனியார்  தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்திருந்தனர். இதனை நம்பி கோவை,  திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிளில் இருந்து ஏராளமானோர்  கோவை நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். ஆனால்  நிறுவனத்தினர் கூறியபடி பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திரும்ப தரவில்லை என்று தெரிகிறது. இந்த நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம்  ரூ.50 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை முதலீடாக பெற்றுள்ளதும்,  ஆயிரக்கணக்கானோரிடம் ரூ.2200 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது  தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை பொருளாதார குற்றப்பிரிவில்  புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதனையடுத்து  அந்த நிறுவனத்தினர் வழக்கை ரத்து செய்யும்படியும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இதனையடுத்து வழக்கை  விசாரித்த நீதிபதி இதில் போலீசார் தலையிடக்கூடாது எனவும், தனியாக ஒரு குழு  அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை 6 மாதத்திற்குள் வழங்கவேண்டும் எனவும்  உத்தரவிட்டார். இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என். பாஷா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கோவை கோர்ட்டில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக நிதி நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாந்த முதலீட்டாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். அதில், செலுத்திய தொகை, அதற்கான சான்று, ஆதார் கார்டு ஆகிய விவரங்களை இணைத்து கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் நீதிபதி தலைமையில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Tags : Investors ,institution ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு