உள்ளாட்சி தேர்தலையொட்டி 3வது நாளில் 521 பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சை, டிச. 12: தஞ்சை மாவட்டத்தில் 3வது நாளான நேற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகள் என இரண்டு கட்டமாக 5.462 பதவிகளுக்கு நடக்கிறத. 589 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியில் 28 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், பூதலூர், திருவையாறு, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாளான கடந்த 9ம் தேதி 85 பேரும், 2ம் நாளான நேற்று முன்தினம் 66 பேரும் என மொத்தம் 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

3ம் நாளான நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 169 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 345 பேரும் என நேற்று மட்டும் மொத்தம் 521 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 189 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 475 பேரும் என மொத்தம் 672 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 16ம் தேதி கடைசி நாளாகும்.

Related Stories: