புதுக்கோட்டை, டிச.12: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய்தொற்று பாதித்த 26 வயது பெண்ணுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கம்மங்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சின்னத்தாள் என்பவர் நோய்த்தொற்று காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 29ம்தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்குழு அவருக்கு ரத்தத்தில் நோய்த்தொற்று இருப்பதையும், இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை செயல் குறைந்தும் இருப்பதை கண்டறிந்தனர். எனவே ரத்த அழுத்தத்தை சீராக்கி அதற்கான மருந்து அவருக்கு உடனடியாக செலுத்தப்பட்டது. ஆனால் நோய்த் தொற்றின் காரணமாக அவருக்கு ரத்தம் உறைவது குறைந்து காணப்பட்டது. எனவே நோயாளிக்கு அனைத்து இடங்களிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
இந்த ரத்தம் உறைதலை சீர்செய்வதற்காக, ரத்த காரணிகளான கிரையோபிரேசிப்பிடேட் என்ற திரவம் செலுத்தப்பட்டது. அதுபோதாத நிலையில் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை ஆகிய மருத்துவமனையில் இருந்தும் அது பெறப்பட்டு நோயாளிக்கு செலுத்தப்பட்டது. மேலும் 42,000 ரூபாய் மதிப்புள்ள பேக்டர் 8 எனும் காரணியும் அவருக்கு ஊசிமூலம் செலுத்தப்பட்டது. நோயாளி மூச்சுவிட சிரமப்பட்ட காரணத்தினால்அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருதயத்திற்கு அருகில் உள்ளபெரிய ரத்தக்குழாய் மூலமாக திரவங்களும், ரத்த காரணிகள் 28 பாட்டிலும் செலுத்தப்பட்டன. ஆறுநாட்கள் செயற்கைசுவாசம் அளித்த நிலையிலும் நோயாளி குணமாகததால், கழுத்தில் ஓட்டை போட்டு டிரக்கியாஸ்டமி குழாய் மூலமாக 23 நாட்கள் செயற்கைசுவாசம் அளிக்கப்பட்டது . அகநோக்கியின் மூலம்மூச்சுக்குழாய்அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டது. இப்போது நோயாளி குணமடைந்து வீடு திரும்புகிறார்.
இதுபற்றி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், நோய்த்தொற்று ஏற்பட்டால் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவை செயலிழந்து காணப்படும். இதில் இரண்டு உறுப்புகளுக்கு மேல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவது சிரமம். அப்பேர்பட்ட நிலையில் 28 மருத்துவர்கள் அடங்கியகுழு இருபத்தொன்பது நாட்கள் செயற்கைசுவாசம் தந்து மொத்தமாக 42 நாட்கள் சிகிச்சை அளித்து நோயாளி வீடு திரும்புவது மிகவும் பாராட்டத்தக்க செயலாகும். தனியார் மருத்துவமனைகளில் இப்படி ஒரு தீவிர சிகிச்சை அளித்து இருந்தால் 15 லட்ச ரூபாய் வரை செலவாகும் கூடியவாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசு மற்றும் சுகாதாரதுறைஅமைச்சர் ரத்த காரணிகளை அரசு மருத்துவமனைகளிலும் கிடைப்பதற்கு வழி செய்தது. இந்த சமயத்தில் பேருதவியாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் மகப்பேறு மருத்துவத்துறையும், மயக்க மருத்துவத்துறையும், நுரையீரல் மருத்துவத்துறையும் ஒருங்கிணைந்து 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதனால்தான் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது என்றும் குறிப்பிட்டார். பேட்டியின்போது, மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர்அமுதா, மயக்க மருத்துவத்துறை தலைவர் டாக்டர்கணேசன், நிலையமருத்துவஅலுவலர் டாக்டர்ரவிநாதன், உதவிநிலைய மருத்துவஅலுவலர் இந்திராணி, மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் வசந்தராமன் ஆகியோர் உடன்இருந்தனர்.