சென்னை: துபாயில் இருந்து பிளைய் துபாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜகுபர் சாதிக் (39) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு வந்திருந்தார். அவரது சூட்கேசில் உபயோகப்படுத்திய 17 லேப்டாப்கள், கைப்பையில் 22 சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு 1 லட்சத்து 30,0000 ஆகும். எனவே சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதை கொடுத்துவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் விமான நிலையத்தைவிட்டு சர்வ சாதாரணமாக வெளியில் சென்றார். அதனால் சுங்க அதிகாரிகளுக்கு சாதிக் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை மீண்டும் விமான நிலையத்திற்கு உள்ளே அழைத்தனர். ஆனால் அவர் அதுதான் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்து விட்டீர்களே இன்னும் என்ன என்னிடம் இருக்கிறது, என்னுடைய ஆடைகளையும் பிடுங்கிவிட்டு அனுப்ப போகிறீர்களா என சுங்க அதிகாரிகளை பார்த்து மிகவும் நக்கலாக கேட்டார். சுங்க அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்து சென்று உள்ளாடைகளை கலைந்து சோதனை செய்தனர். அவரது உள்ளாடையில் 40 கிராம் தங்க செயின், 345 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 15 லட்சம் ஆகும்.