சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது : 2 கிலோ பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பூக்கடை காவல் ஆய்வாளர் சித்தார்த் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் சந்தேக நிலையில் 2 பேர் நின்றிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் பூக்கடை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் தங்கசாலை நடைபாதையில் வசிக்கும் அசோக்குமார் (37), பல்லவன் சாலை, கல்லறை பகுதியில் வசிக்கும் வேலு (எ) பைக் வேலு (42) என்பதும், இவர்கள் மீது ஏராளமான கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் வேலு மற்றும் அசோக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: