‘படியில் பயணம் நொடியில் மரணம்’ பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி : தி.நகர் பேருந்து நிலையத்தில் சோகம்

சென்னை: மாநகர பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் தி.நகர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரி எம்ஜிஆர் நகர், பழனியப்பா தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரண் (11). தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கமாக சரண் நண்பர்களுடன் வீட்டில் இருந்து மாநகர பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை ஏ.ஜி.எஸ் காலனியில் இருந்து தி.நகர் நோக்கி வந்த மாநகர பஸ்சில் சரண் நண்பர்களுடன் வேளச்சேரியில் இருந்து பயணம் செய்தார். கூட்ட நெரிசல் காரணமாக சரண் பஸ்சின் முன் பக்க படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

தி.நகர் பேருந்து நிலையத்திற்குள் நேற்று காலை 8.50 மணிக்கு பஸ் நுழைந்தது. அப்போது மாணவன் சரண் பஸ் நிற்பதற்குள் கீழே இறங்கி உள்ளான். இதனால் எதிர்பாராத விதமாக சிறுவன் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினான். இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சரண் துடிதுடித்து உயிரிழந்தான். இதை பார்த்த பயணிகள் மற்றும் உடன் வந்த மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவன் சரண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று, அதன் அடிப்படையில் மாநகர பேருந்து ஓட்டுனர் திருஞானம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: