வேலூர், டிச.12: நெமிலி அருகே பள்ளி வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியரால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் வாட்ஸ்அப் வைரலால் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காய்ச்சலால் ஆசிரியர் படுத்திருந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கன்னிகாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் ஒருவரும், உதவி ஆசிரியர் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இப்பள்ளியின் உதவி ஆசிரியர் தள்ளாடியபடி வந்து வகுப்பறையில் படுத்துவிட்டதாக கூறி வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த ஆசிரியர் போதையில் தள்ளாடியபடி வந்ததாக பரவிய தகவல் பரபரப்பை அதிகப்படுத்தியது. ஆசிரியர் தள்ளாடியபடி வந்து படுத்ததை அதிர்ச்சியுடன் பார்த்தபடி மாணவிகள் தரையில் அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.