வேலூர்- அரக்கோணம் இடையே 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயில் இயக்கம்

வேலூர், டிச.12: வேலூர் -அரக்கோணம் இடையே சாதாரண பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் இம்மாதம் 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயிலாக மாற்றி இயக்கப்படுகிறது. வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம் இடையே 10 பெட்டிகளை கொண்ட பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை 4.30 மணியளவில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு சேவூர், திருவலம், முகுந்தராயபுரம், வாலாஜா, தலங்கை, சோளிங்கர், மகேந்திரவாடி, அன்வர்திகான்பேட்டை, சித்தேரி, மேல்பாக்கம், அரக்கோணம் வரை தினசரி ரயிலாக சென்று வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 6 சர்வீஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள், வியாபாரிகள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

காட்பாடியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரயில் அரக்கோணத்திற்கு காலை 6.30 மணியளவில் சென்று சேரும். அங்கிருந்து காலை 7.10 மணியளவில் புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 9.45 மணிக்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து காலை 10.10 மணியளவில் புறப்பட்டு சென்று காட்பாடி வழியாக மீண்டும் அரக்கோணத்திற்கு செல்லும். இந்நிலையில், வேலூர் கன்டோன்மென்ட் -அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இடையே மெமு(மல்டிப்பிள் எலக்ட்ரிக்கல் மோட்டார் யூனிட்) மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே நிர்வாகம் வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் இடையே சாதாரண பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயிலை மாற்றி மெமு மின்சார ரயிலாக இயக்க முடிவு செய்துள்ளது. இம்மாதம் 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘சாதாரண பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்ட பாஞ்சர் ரயில் தற்போது மின்சார ரயில் கார்களாக மாற்றி இயக்கப்பட உள்ளது. இரு முனைகளிலும் ரயில் இன்ஜினுடன் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட உள்ளது. மெத்தைகளுடன் கூடிய இருக்கைகள், பெண்கள் பயணிக்க தனிப்பெட்டி, பயோ கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இம்மாதம் 16ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களுக்கான தடம் எண்களும் மாற்றப்பட்டுள்ளது. வண்டி எண்:56009 (புதிய எண்:66059)காலை 7.10 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணியளவில் வேலூர் கன்டோன்மென்ட் வந்து சேரும். அங்கிருந்து வண்டி எண்:66064 காலை 10.10 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு அரக்கோணம் சென்று சேரும். அங்கிருந்து வண்டி எண்:66063 மதியம் 12.30 மணியளவில் புறப்பட்டு மாலை 3.25 மணிக்கு வேலூர் கன்டோன்மெண்ட் வந்து சேரும். அங்கிருந்து வண்டி எண்:66060 மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு வழியாக சென்று அரக்கோணம் சென்றடையும். ரயில் இன்ஜினை மாற்ற வேண்டிய தேவையில்லை என்பதால் காலதாமதம் தவிர்க்கப்படும்.

அதேபோல், சித்தேரி, மகேந்திரவாடி, சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், சேவூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு மெயின் தண்டவாளத்தில் இருந்து பிரிந்து பிளாட்பாரத்திற்கு சென்று நிற்கும். பின்னர், மீண்டும் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு மெயின் தண்டவாளத்தை வந்தடைய 7 நிமிடங்கள் வரை ஆகிறது. இதேபோல், மற்ற ரயில் நிலையங்களுக்கும் சென்று வெளியே வர அரைமணி நேரத்திற்கும் மேல் தாமதமாகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும் இந்த மெமு மின்சார ரயில் இயக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: