×

உடல்நிலை பாதிப்படைந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு வேண்டும்

சிவகங்கை, டிச. 11: உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மற்றும் கர்ப்பிணி பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற டிச.27 மற்றும் டிச.30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். இவர்களில் 80 விழுக்காடுக்கு மேல் பெண் ஆசிரியர்கள் ஆவர். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்துகொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது, ‘தேர்தல் பணியிலிருந்து மாநில தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்டவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட கூடாது என வலியுறுத்தி கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்’ என்றார்.


Tags : Teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...