திருச்சி, டிச.11: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை திருச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆண்டு தோறும் டிச.10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசுத்துறை அலுவலர்களும் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்குமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படுகின்ற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகின்றன. அனைத்து மனித உரிமைகளின் பால் உண்மையான மற்றும் மாறாத பற்றுறுதி மிக்கவராக இருப்பேன் என மாவட்ட கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க அதனை அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓ சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வடிவேல் பிரபு, (வேளாண்மை) சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.இதேபோல மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தலைமையில், உதவி ஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.