வத்தலக்குண்டு, டிச. 11: கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்யாததை கண்டித்து வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு விவேகானந்தா நகரில் ஒரு சினிமா தியேட்டர் பின்புறம் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வழியே செல்லும் கழிவுநீர் கால்வாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அடைத்தது. இதனால் கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களிடம் பலமுறை கூறினர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜெர்மன்ராஜா தலைமையில் நேற்று வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி பேச்சுவார்த்தை நடத்தினார். நாளைக்குள் (இன்று) கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்யப்படும் என உறுதியளித்தார். அதன்பிறகே பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.