உழவன் செயலி மூலம் பூச்சி நோய் தாக்குதலை விவசாயிகள் கண்காணிக்கலாம்

பட்டுக்கோட்டை, டிச. 11: உழவன் செயலி மூலம் பூச்சிநோய் தாக்குதலை விவசாயிகள் கண்காணிக்கலாம் என்று வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது வேளாண்மையில் புதுப்புது தொழில்நுட்பங்கள் நடைமுறையில் இருந்தாலும் உழவன் செயலி மூலம் பயிர்களில் தோன்றும் பூச்சிகளின் தாக்குதல் மற்றும் நோய்களால் ஏற்படும் பாதிப்புக்கு விவசாயிகள் உடனே தீர்வு காண ஒரு வரப்பிரசாதமாக இந்த செயலி உள்ளது.

எனவே விவசாயிகள் தங்களின் ஆன்ட்ராய்டு அலைபேசியில் பிளே ஸ்டோரில் உழவன் செயலி என்னும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் பண்ணை வழிகாட்டி என்பதை கிளிக் செய்து பாதிக்கப்பட்ட பயிரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் தங்கள் கைபேசி மூலமாகவே அதற்கான ஆலோசனைகளை உடனே நிபுணர்களிடம் இருந்து பெற முடியும். எனவே தற்போது பயிர் சாகுபடியில் ஏற்படும் பூச்சி நோயை கண்காணித்து உடனுக்குடன் தீர்வு காண அனைவரும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம். இயற்கையின் சூதாட்டத்திலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்து கொள்ள கடைசி தேதி டிசம்பர் 15 வரை காத்திராமல் அனைவரும் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: