நாங்குநேரி. டிச. 11: நாங்குநேரியில் சார்பு நீதிமன்றம் விரைவில் செயல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நாங்குநேரியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நாங்குநேரி, திசையன்விளை தாலுகாவை சேர்ந்தவர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் திறக்கப்பட்டது.
இதனிடையே நாங்குநேரியில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்தார். இதையடுத்து இதற்கான அரசாணை (569) கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாங்குநேரியில் சார்பு நீதிமன்றத்திற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. நாங்குநேரியில் சார்பு நீதிமன்றம் செயல்படும் பட்சத்தில் வழக்குகள் தேக்கம் இன்றி விரைவாக முடிக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, இனியும் தாமதமின்றி நாங்குநேரியில் புதிய சார்பு நீதிமன்றம் விரைவில் செயல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில பலமாக எழுந்துள்ளது.