மேச்சேரி பண்ணை பள்ளியில் விவசாயிகளுக்கு கால்நடை தீவன உற்பத்தி பயிற்சி

மேட்டூர்,  டிச.11: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை தீவன உற்பத்தி வகுப்பு  நடத்தப்பட்டது. அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற நான்காம் கட்ட வகுப்பிற்கு  வந்த விவசாயிகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.  மேச்சேரி கால்நடை மருத்துவமணை முதன்மை மருத்துவர் சின்னமாரியப்பன் தலைமை  வகித்து, விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகளின் அவசியம் குறித்து விளக்கம்  அளித்தார். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் புஷ்பநாதன்,  தீவன வகைகள் குறித்தும், அவற்றை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம்,  மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்கள், அவற்றின் உற்பத்தி குறித்தும்,  பசுக்களுக்கு அசோலா கொடுப்பதால், பால் சுரப்பது அதிகமாவதோடு அடர்த்தி  கூடுவதாகவும் தெரிவித்தார். மேலும், வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு  பசுந்தீவனம் கிடைப்பதில்லை. அதனால் அசோலா சமச்சீர் உணவாகவும், அதிக  புரதசத்து நிறைந்த உணவாகவும் பயன்படுகிறது. மேலும், விவசாயிகள் உபரி வருவாய்  பெறுவதற்கு கறவைமாடு வளர்ப்பு, ஆடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பை  ஒருங்கிணைந்த பண்ணை தொழிலாக செய்யவேண்டும் என்று அறிவுரை கூறினார்.

இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பத்மாவதி, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: