குமாரபாளையம், டிச.11: குமாரபாளையம் நகராட்சியில் இடிக்கப்படும் கட்டிட கழிவுகளை சாலையோரம் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை இந்தியா திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், நகராட்சி பொறியாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அதிகாரிகள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சியில் சுகாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் படி, புதியதாக கட்டப்படும் வீடுகளின் கழிவுகள், பழைய வீடுகளை இடிப்பதால் ஏற்படும் கழிவுகள் அனைத்தையும், தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்வதற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கழிவுகளை கட்டிட உரிமையாளர் தனது சொந்த செலவில், மணிமேகலை தெரு நுண் உர செயலாக்க மையத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் கொட்ட வேண்டும். மாறாக கட்டிட கழிவுகளை தெருக்களில் கொட்டினால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், கட்டிட இடிபாடுகளை கையாளுதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஆணையாளர் ஜஹாங்கிர்பாஷா பேசுகையில், ‘நாமக்கல் நகராட்சி பகுதியில், பழைய கட்டிடங்களை இடிக்கும் போது 80 சதவீதம் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும்படி இடிக்க வேண்டும். கட்டிட கழிவுகள் சாக்கடைகள், தெருக்களில் கொட்டக்கூடாது. பொதுமக்கள் கட்டிட இடிபாடுகளை லத்துவாடியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்ட வேண்டும். வரும் 1ம்தேதி முதல் தெருக்கள் சாக்கடைகளில் கட்டிட இடிபாடுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,’ என்றார். இதில், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், பதிவு பெற்ற பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குபவர்கள், பழைய கட்டிடம் இடிக்கும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் கலந்துகொண்டனர்.