×

கள்ளக்காதல் விவகாரத்தில் வாத்திய கலைஞருக்கு தர்ம அடி; 2 பேர் கைது

சேந்தமங்கலம், டிச.11:  சேந்தமங்கலம் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் வாத்திய கலைஞரை தாக்கிய 2 பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(32) என்பவரும் மேளம் வாசிக்கும்  தொழில் செய்து வருகின்றனர். கோபிநாத்தின் மனைவி தனலட்சுமி(30). இவருக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனலட்சுமியை, மாதேஸ்வரன் அழைத்து கொண்டு தலைமறைவாகி விட்டார். சில நாட்களில் அவரது உறவினர்கள், தனலட்சுமியை அழைத்து வந்து கோபிநாத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், இந்திரா காலனி காளியம்மன் கோயில் அருகில் கோபிநாத், அவரது உறவினர்கள் மணிவாசகம்(21), பார்த்திபன்(30), அர்ஜூனன் (28) ஆகியோரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த மாதேஸ்வரன், அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.  இதனால் இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் உள்ளிட்ட 4 பேரும், அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து வந்து, மாதேஸ்வரனை சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.  இதில் படுகாயமடைந்த மாதேஸ்வரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாதேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் எஸ்ஐ கெங்காதரன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கோபிநாத், மணிவாசகம் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபன், அர்ஜூனன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு