×

ஆனைக்கொம்பன் நோயை எதிர்க்கும் திறனுடைய குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும்

புதுக்கோட்டை, டிச.11: ஆனைக்கொம்பன் நோயை எதிர்க்கும் திறனுடைய குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை வட்டாரத்தில் நடப்பு வருடம் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிரில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடர் மழையினாலும், தட்பவெப்ப மாறுதல்களினாலும் ஆனைக்கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும்.

இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும்,கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைபோல் தோன்றும். பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள்,தாள்களின் மேல்புறம் இடும்.இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் ஆனைக்கொம்பன் நோய்க்கு எதிர்ப்பு திறனுடைய குறுகிய கால ரகங்களாக ஏடிடி-39, ஏடிடி-45, மத்திய கால இரகமான எம்.டி.யு3 ஆகியவற்றை நடவு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்த கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும்.ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், ராசாயன கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா