கரூர், டிச. 11: நகராட்சி பகுதியில் அபேட் மருந்து விநியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்மழை காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் சீதோஷ்ணநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக கொசுக்களின் வளர்ச்சியும் அதிகரித்து பொதுமக்களை அதிகளவு சிரமப்படுத்தி வருகிறது. இதுபோன்ற சமயங்களில் வீடு வீடாக அபேட் மருந்துகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் பேரல்களில் ஊற்றுவதற்காக நகராட்சி பணியாளர்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அபேட் மருந்து வழங்கப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது. எனவே அதிகரித்து வரும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கு விரைந்து அபேட் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.