ஓசூர், டிச.11: கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழாவையொட்டி, சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர். இதே போல், ஓசூரை சுற்றி உள்ள ஈஸ்வரன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் வீடுகளின் முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டும், அகல் விளக்குகள் ஏற்றியும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.