திருப்பூர், டிச. 11: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுபாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச.27ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதற்கட்டமாகவும், 30ம் தேதி அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2,295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முதல் பெறப்பட்டு வருகிறது. மேலும், மாநில தேர்தல் ஆணையத்தின், அறிவுரையின் படி தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 3வது தளத்தில் அறை எண்-328ல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் கண்காணிக்கப்படும். மேலும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், தேர்தல் நடத்தை விதி மீறல் மற்றும் ஏதேனும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 7023 மற்றும் 0421-2971494 என்ற எண்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் 2019 தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், ஆய்வு செய்து அலுவலர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், திட்ட இயக்குநர் கோமகன் (மகளிர் திட்டம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார் (தேர்தல்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.