×

கோவையில் அதிகாலையில் நிலவும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிப்பு

கோவை, டிச. 11: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் குளிரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நவம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாதம் முழுவதும் பனிப்பொழிவு காணப்படும். குறிப்பாக, தமிழ் மாதம் கணக்கின்படி, மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும். தை, மாசி மாதத்திலும் பனி நீடிக்கும். அதிகாலை நேரத்தில் அதிகளவில் பனிமூட்டம் காணப்படும்.  கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரத்தில் அதிகளவில் பனிப்பொழிவு உள்ளது. பனியின் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது.

பனியின் காரணமாக அதிகாலை நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு இருந்தால் மழை குறையும் வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில், “மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இது தொடருமா? என்பதை அடுத்த 2 நாட்கள் கண்காணித்துதான் கூற முடியும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேர வெப்பநிலை 24 டிகிரி வரை இருந்தது. இது தற்போது, குறைந்து 20.5 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. பருவமழை இன்னும் 20 நாட்கள் இருக்கிறது. பனி நீடித்தால் மழை குறையும் வாய்ப்பு இருக்கிறது” என்றார்.


Tags : public ,Coimbatore ,snowfall ,
× RELATED மாணவர்கள் பலியான விவகாரத்தை தாமாக...