ஈரோடு, டிச.11: வேலூரை சேர்ந்த அகில பாரத இந்து மகாசபையின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகன் என்பவர் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சுவேதா என்ற பெண் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பிட் காயின் மோசடி செய்து தலைமறைவாக உள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோ பதிவு ஒன்றில் ரமேஷ், குட்டிமணி, ரவிராஜா, சுபாஷ் சாமிநாதன் ஆகியோர் மீது கடத்தல் மற்றும் மிரட்டல் புகார் கூறி இருந்தார்.ஆனால், சுபாஷ் சாமிநாதன் என்பவர் அகில பாரத மகாசபையின் மாநில தலைவர் என அவராகவே தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு, கட்சிக்கு களங்கம் விளைவித்து வருகிறார். மேலும், இவர் கட்டப்பஞ்சாயத்து, பண மோசடி, அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர், ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். பாலியல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு உள்ளார். பிட் காயின் மோசடி விவகாரம் இவரால் திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். மேலும், அகில பாரத இந்து மகாசபையின் பெயரை தவறாக பயன்படுத்தி வரும் சுபாஷ் சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.