வேலூர், டிச.11: தமிழகத்தில் உள்ள பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்க கால அவகாசம் நீட்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 13ம் தேதி முதல் 26ம் தேதி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணத்தையும் இணையதளம் வழியாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல், கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை கடந்த 29ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களின் பெயர் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து மாணவர்களின் பெயர், பாட தொகுப்பு உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்வதற்கு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு மேல்நிலை முதலாமாண்டு பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு எக்காரணங்கொண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.