ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஆண்டுகளாக பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை

அணைக்கட்டு, டிச.11: ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டில் 2 ஆண்டுகளாக பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்காததால் இந்த பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்க தாசில்தாரிடம் பொதுமக்கள் கோரிக்கை   வைத்தனர். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர விஏஓ அலுவலகங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு இலவச வேட்டி, சேலை பண்டல்கள் கடந்த மாதம் கொண்டு வரப்பட்டது. இதில் மாவட்டம் பிரிக்கும்போது ஆம்பூர் தாலுகாவில் இருந்த அகரம் உள்வட்டம் அணைக்கட்டு தாலுகாவில் சேர்க்கப்பட்டது, ஆனால், அகரம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு வழங்குவதற்கு அணைக்கட்டு தாலுகாவிற்கு வேட்டி, சேலைகள் வரவில்லை. இதனிடையே, தாலுகா அலுவலகத்திற்கு இலவச வேட்டி, சேலைகள் வந்த தகவல் அறிந்த மேலரசம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் முரளிகுமாரரிடம், ஸ்டாக் குறைவாக வந்துள்ளதாக கூறி, எங்கள் பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் பெரும் பாலானோருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை என புகார் கூறினர்.

மேலும், அடுத்த ஆண்டாவது அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தாசில்தார் முரளிகுமார் அந்த பகுதி வருவாய் ஆய்வாளரை தொடர்பு கொண்டு ஒடுகத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட மேலரசம்பட்டு உட்பட அனைத்து கிராமங்களுக்கும் இலவச வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகத்தில் உள்ளது. அதனை எடுத்து சென்று பொங்கல் பண்டிக்கைக்கு முன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: