×

5வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை உயிர் தப்பியது

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை, தங்கசாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது தளத்தில் வசிப்பவர் மைபால் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நீலம் (28). இவர்களுக்கு தினிஷா என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வேலை விஷயமாக மைபால் பெங்களூருக்கு சென்றுவிட்டதால் வீட்டில் நீலமும், குழந்தையும் மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு தாயும், மகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நீலம் எழுந்தபோது அருகில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து தேட ஆரம்பித்தார். இதை பார்த்து பக்கத்து குடியிருப்புகளில் வசிப்பவர்களும் வந்து தேடினர். அப்போது குழந்தை குடியிருப்புக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த மொபட் சீட்டில் விழுந்து அழுதுகொண்டிருந்தது தெரிந்தது.

உடனே, கீழே ஓடிச்சென்று குழந்தையை தூக்கியபோது உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தை, கதவை சரியாக மூடாததால் தவிழ்ந்துவந்து கீழே விழுந்ததா என விசாரிக்கின்றனர்.

Tags : baby ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி