கோவில்பட்டி: கோவில்பட்டியில் லாயல் குழுமத் தலைவர் மாணிக்கம் ராமசாமி சிலை திறப்பு விழா நடந்தது. கோவில்பட்டியில் லாயல் குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மாணிக்கம் ராமசாமியின் சிலை திறப்பு விழா நடந்தது. ஆலை வளாகத்தில் நடந்த இவ்விழாவில் தலைமை செயல் அதிகாரி வெள்ளையங்கிரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்துறை முன்னாள் செயலாளர் பூர்ணலிங்கம், மாணிக்கம் ராமசாமியின் சிலையை திறந்துவைத்துப் பேசினார். விசாலா, விசாலாட்சி பழனியப்பன், இயக்குநர் வைத்தியநாதன், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
விழாவில் தொழிலாளர் தரப்பில் அனிதா, தொழிற்சங்கம் தரப்பில் சிவப்பிரகாசம், வடமாநில தொழிலாளர்கள் தரப்பில் சந்தோஷ், அலுவலர்கள் தரப்பில் முதுநிலை உதவி தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர், லாயல் குழும தலைவர் மாணிக்கம் ராமசாமியின் சேவைகளை நினைவு கூர்ந்தனர். டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணன் தலைமையில் ஸ்ரீதேவி ந்ருத்யாலயா நடன குழுவினரின் ஓம் சரவணபவ நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஆலை துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுநிலை துணைத்தலைவர் மணிவண்ணன், துணை பொதுமேலாளர் சரவணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
வீட்டில் தவறி விழுந்த பெண் சாவு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் காமராஜ் நகர் தெருவை சேர்ந்தவர் சகாயபெலிக்ஸ் ராஜா. லாரி டிரைவர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் மணிமேகலா (40) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2வது திருமணம் செய்துகொண்டபோதும் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனிடையே கடந்த 3ம் தேதி மணிமேகலா, வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென தவறிவிழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்.