கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் உள்ள 2 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.13 லட்சம் மதிப்பிலும், அதே பகுதியில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.8.50 லட்சம் என மொத்தம் ரூ.21.50 லட்சம் மதிப்பிலான நிதி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. இரண்டு பள்ளியிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அய்யப்பா, ஷியாம்சுந்தர், வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.