சிதம்பரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக சிதம்பரம் சுற்று வட்டார இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கில் விலை போகும் நிலங்களை குறைந்த அளவில் பணம் ஒதுக்கீடு செய்து கையகப்படுத்தியதை கண்டித்தும், நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். துரைராஜன், பாலசுப்பிரமணியன், வீரமணி, காந்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் மாமல்லன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.