×

அரசு டாக்டரிடம் நகை பறித்தவருக்கு 4 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், டிச. 10:அரசு மருத்துவரிடம் 20 பவுன் நகை பறித்த விவகாரத்தில் வாலிபருக்கு 4 ஆண்டு கடுங்காவல் விதித்து திருவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் மேகலா. இவர் கடந்த 19.11.2011 அன்று டூவீலரில் முகவூரிலிருந்து ராஜபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார். முகவூர் விலக்கு அருகே வரும்போது, மர்ம நபர்கள் மேகலா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 20 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன், பாண்டி, ராமச்சந்திரன், ராமர், பிரசாந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரிமளா கணேசனுக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பிரசாந்த் இறந்து விட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமர், பாண்டி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சீராராக இருப்பதால் இவர்கள் மீதான வழக்கு விருதுநகரில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Tags : jeweler ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!