தஞ்சை, டிச. 10: தஞ்சையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மண்டல வேலை நிறுத்த தயாரிப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட செயலாளர் கருணாநிதி, பொருளாளர் அய்யம்பெருமாள், நிர்வாகிகள் அப்துல்காதர், ராமலிங்கம், செந்தில்குமார், ராமலிங்கம், யுவராஜ் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ள 40 சட்டங்களை திரும்ப பெற்று லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் ஜனவரி 8ம் தேதி நடைெபறும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வதற்காக வரும் 15ம் தேதி ஆயத்த கூட்டத்தை சிறப்பாக நடத்துவது. தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்களின் 30 அம்ச கோரிக்கை குறித்து சங்க தலைவரை அழைத்து பேசி உடனடியாக தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர்களின் நியாயமான 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவதுபோல் பொங்கல் பை விநியோகிப்பது மற்றும் இலவச வேட்டி சேலை வழங்குவது போன்ற பணிகளை பார்க்கும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமி மதுபோதையில் மரியாதை குறைவாக பேசி வருவதால் அரசு பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி மாறுதல் செய்ய வேண்டும். இந்த செயல் தொடர்ந்தால் அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லிங்குசாமி நன்றி கூறினார்.