தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்பு சாத்தும் பணி துவக்கம்

தஞ்சை, டிச. 10: தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்பு சாத்தும் பணிகள் நேற்று துவங்கியது. தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் மற்றும் யாகசாலை பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கோயில் முழுவதும் உள்ள சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்பு செலுத்தும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த பணியில் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர்.

450 லிட்டர் தயிர், 200 கிலோ பச்சரிசி மாவு கொண்டு இரண்டையும் ஒன்றாக கலந்து அதை கற்சிலைகளில் பூசி வைத்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து சீயக்காய் பவுடரால் சிலைகளை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் எண்ணெய் காப்பு செய்யவுள்ளனர். இந்த பணி நேற்று துவங்கியது. இந்த பணிகள் 15 நாட்களுக்கு நடைபெறும். இதில் பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள், ராகு, கேது சிலைகள், சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட சிலைகளுக்கு மாவு காப்பும் சாத்தும் பணி துவங்கியது.

Related Stories: