புதுக்கோட்டை, டிச.10: புதுக்கோட்டையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 60 வயது முதியவர் பலியானார். ஒருவர் காயமடைந்தார். கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் (60) என்பவருடன் புதுக்கோட்டை அருகே உள்ள சிப்காட்டில் இருந்து கட்டியாவயல் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாரத விதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துக்கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் நிர்மல்குமார் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த நிர்மல்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்கருப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பாஸ்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.